கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றனர் ஆன்றோர். ஊருக்கொரு கோயிலை உருவாக்கினர் எமது முன்னோர்கள். இன்று குடிமனைகளைவிட கோயில்கள் பெருகிவிடும் போலுள்ளது.
எங்கே பார்த்தாலும் கேயில், கோயில். இன்று இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே இருப்பதற்கு இவ்வாறு கண்மூடித்தனமாக எழுப்பப்படும் கட்டிடங்களும் ஒரு காரணம்தான்.
ஒருவேளை உணவிற்கு அல்லற்படும் மக்கள் ஒருபுரம், உறையுள் இல்லாமல், உடுத்த உடை இல்லாமல் போராடும் மக்கள் ஒருபுரம் என நாடு அல்லற்படடடுக்கொண்டிருக்க அடிக்கொரு திருத்தலங்களும் எழுந்து கொண்டுள்ளது.
அறத்தினையும் தர்மத்தினையும் போதிக்கும் இந்துமதம் இன்று என்ன செய்கின்றது. பொது மக்களுக்காக உருவாக்கப்படட்ட திருத்தலங்கள் தனி ஒருவருவருக்கு சொந்தமாக பார்க்கப்படுகிறது. நாட்டின் தலைவர் போல் கோயிலின் உரிமையாளர் வைப்பதே சட்டமாகின்றது.
சூலாயுதத்துடன் ஒரு மரத்தின் கீழ் முளைத்த மக்களின் கடவுள் நம்பிக்கை இன்று தனிப்பட்ட ஒருவருக்காவோ அரசியல்தலையீட்டாலோ இன்று வளர்ந்து நிற்கின்றது. பக்தி என்பது மனதளவில் இருக்க வேண்டும் அதை ஆடம்பரமாக்கியது ஏன்? இவ்வாறு செலவு செய்யும் பணத்தினை ஏழைகளுக்கும், அநாதை சிறார்களுக்கும் வழங்கலாமே..? உதவி செய்ய இரங்காதோர் கோயில்கள் கட்டி என்ன பயன்?
கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பதல்ல வாதம். நமக்கு மேலே ஏதொ ஓரு சக்தி இருக்கின்றது. அதனை நம்பத்தான் வேண்டும். ஆனால் ஊரில் ஒருவன் கோயில் கட்டி அன்பளிப்பு என்று பெயரை எழுதிவிட்டால் போதும். நானும் கட்டுவேன் என்கின்றது இன்னொரு செல்வப்பேய்..
வழிபாடு நடத்துகிறார்கள் அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் இந்த வழிபாட்டில் காணக்கூடிய திருவிளையாடல் இருக்கிறதே! 10ரூபாய் கொடுத்தால் சாமிக்கு 4 மந்திரம் பணம் கொடுத்தவருக்கு 2 பூ, 100 ரூபாய் கொடுத்தால் சாமிக்கு 10 மந்திரம் பணம் கொடுத்தவருக்கு பூமாலை.
திருவிழா ஆரம்பம். ஒலிபெருக்கி மின்சாரம் தடைப்பட்டாலும் பாடும். கோயிலின் உரித்துடையவர் தவிர யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் பிரசங்கம் நடத்துவார் ஒருத்தர். தேரை இழுத்து வீதியில் வந்தால் போதும். வீதி மூடப்பட்டுவிடும். அவசர வேலையாக போகிறவன்கூட தேர் வீதியை கடக்கும் வரை நடுவீதியில் நிற்கவேண்டும்.
இல்லை இது அவதூறு, இவ்வாறு கூறுவது எங்களை அவமதிப்பது போல் என்று கூறினால்; வழமையான திருவிழாவில் இரவு 10 மணிவரை நடாத்தப்பட்ட பூஜையும் திருவிழாவும் ஊடரங்கு சட்டத்தின் போது அதற்கேற்ப மாறியது ஏன்?
சாமியும் சாதிக்கேற்ப வேறுபட்டு நிற்கின்றது. மேல் வர்கத்தினர் வணங்கும் கடவுள் வசதிக்கேற்ப வளர்கிறது. கீழ்மட்டத்தில் உள்ளோரின் சாமி இன்றும் அதே நிலையில் இருக்கின்றார். சாமியும் சாதிப் பிரச்சனையில் சின்னாபின்னமாகிப் போகின்றது.
போதனைகள் பலவற்றை போதிமரநிழலில் அமர்ந்து உபதேசித்துச் சென்றார் புத்தர். புத்தரின் புனித சின்னங்களை வைத்து தூபிகளை கட்டினர். ஆனால் இன்று திரும்பிய இடமெல்லாம் காணப்படும் சிறு சிறு விகாரைகள் எதை வைத்துக் கட்டப்பட்டன?
இத்தனைநாள் இல்லாத புத்தர் சிலைகள் இன்று எப்படி திடீரென்று முளைக்கின்றன. சைவ சமய கடவுளர்களைத்தள்ளி பௌத்த மதச் சிலைகள் முன்கொண்டுவரப்படுவதன் பின்னனி என்ன? பெரும்பான்மையினரின் ஆதிக்கமா?
இன்று பௌத்தமதத்தினரால் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் எல்லாம் புத்தருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதை செய்யாதே என்று புத்தர் கூறிச் சென்றாரோ அதுவே இன்று ஆட்சிக்கு அத்திவாரமாகின்றது.
இஸ்லாமிய மதத்தினைப் பொறுத்தவரையில் ஒரு பிரதேசத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பள்ளிவாசல்களே அமைக்கப்படுகின்றன. இன்று ஆங்காங்கே பள்ளிவாசல்கள் பிரதேசத்திற்கு சில முளைக்கின்றன.
கிறிஸ்தவ சமயத்தினை எடுத்துக்கொண்டால் ஒரு இறைதூதரான இயேசுநாதரைக் கொண்டு 200க்கும் மேற்பட்ட பிரிவுகளாக இம் மதம் பிரிந்து வழிபடுகின்றது. இதன் பேரில் பல தேவாலயங்கள். சலுகைகள் வழங்கி மதத்தினை பரப்பும் நிலையில் பக்தி எவ்வாறு அமையும் என்றால் கேள்விக்குறிதான். இங்கும் விடுபட வில்லை வழிபாட்டில் வளரும் விந்தை.
முன்னரெல்லாம் பக்தர்கள் அர்ச்சனை தட்டேந்தி ஆலயம் சென்றனர். இன்று கையில் புகைப்படக்கருவியும் ஒளிப்படக்கருவியும் தான் கொண்டு செல்கின்றனர்.
பக்கி இல்லை என்று சொல்லவில்லை அப்பக்தி இடையூராக இல்லாமல் அமைந்தால் நன்றாக இருக்குமே? நேர்த்தி என்றபேரில் உள்ள கோயிலை இடிப்பதை விட நான்கு பேருக்கு உதவுதை கடவுள் விரும்பமாட்டாரா?
எந்த மதக் கோயிலினை எடுத்தாலும் மக்களால் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு குறைவில்லை. அவ்வாறு சேரும் பணம் நேர்த்திக்காகவோ, செல்வச்செருக்கை காட்டுவதற்காகவோ, நம்பிக்கைக்காகவோ அல்லது காரணம் இன்றி சேர்ந்து விடுகின்றது. இவ்வாறு சேரம் பணத்திற்கு கோயில் நிர்வாகம் கண்டிப்பாக கணக்கு காட்டியே தீர வேண்டும்.
கணக்கினை முடிப்பதற்காகவும் தாங்கள் பொறுப்புடன் இருப்பதாக காட்டிக்கொள்வதற்கும் சேரும் பணத்தினை என்ன செய்வது என்று தெரியாது இன்று கோயில்கள் இடித்து பெரிப்பத்துக் கட்டப்படுகின்றன. இதன் கணக்கு ஒன்றாக இருக்கும் காட்டப்படும் கணக்கோ வேரொன்றாக இருக்கும். இதன் பின்னணியை பல சினிமா படம் பிடித்து காட்டி விட்டன.
ஆலயங்கள் புனரமைக்கப்பட்டது. அன்று எதற்காக? படையெடுப்புகளின் போது, இயற்கை அழிவுகளின்போது சேதமடைந்து அல்லது புதைந்து போயிருந்த காரணங்களுக்காகவே. ஆனால் இன்று செல்வமிகுதியால் செல்வாக்கின் மமதையால் இருப்பது இடிக்கப்பட்டு புனரமைக்கப்படுகின்றது.
புனரமைப்பு என்ற பேரில் புலம்பெயர் உறவுகளும் கண்மூடித்தனமாக தாம் கஷ்;ரப்பட்டு சம்பாதிக்கும் பணத்தினை அனுப்பிவைக்கின்றனர். ஆனால் வேதனை தருவது கோயிலுக்கு என கொடுக்கப்படும் பணம் முழுமையாகக் கோயிலுக்கும் பயன்படுவதில்லை வேறு நற்காரியங்களுக்கும் பயன்படாமல் எங்கோ சேரும் நிலை..
ஆலயங்கள் அமைக்கப்படுவது தவறில்லை. புனரமைக்கப்படுவதும் தவறில்லை. எது நன்மை? எது தீமை? ஏங்கே என்ன நடக்கின்றது என்பதை மக்கள் அறிந்து நடக்க வேண்டும். அறியாமை அகல வேண்டும்.
No comments:
Post a Comment